பிரான்ஸ் - மேற்கு பகுதியில் உள்ள நானெட்ஸ் நகரில் 15-ம் நூற்றாண்டு பழைமையான சென்.பீட்டர் மற்றும் சென் போல் தேவாலயத்துக்குத் தீ வைத்தவா், ஆலயத்தில் தன்னாவலராகப் பணியாற்றி வந்த ஒரு அகதி என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரான்சின் வரலாற்று சின்னங்களில் ஒன்றாகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வரும் சென்.பீட்டர் மற்றும் சென். போல் தேவாலயத்தின் சில பகுதிகள் கடந்த 18 ஆம் திகதி ஏற்பட்ட தீயில் கருகிச் சேதமடைந்தன.
அதிகாலை நேரம் தீ பரவியதால் தேவாலயத்திற்குள் ஆட்கள் யாருமில்லை. இதனால் உயிரிழப்பு, படுகாயம் போன்ற அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.
தேவாலயத்தில் தீ பிடித்தது எப்படி? என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
விசாரணையில் தன்னார்வலராக பணியாற்றிய ருவாண்டாவைச் சேர்ந்த 39 வயது அகதி ஒருவரே தேவாலயத்துக்குத் தீவைத்ததாக தெரியவந்துள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை குறித்த அகதியும் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதாக வழக்கறிஞர் பியர் சென்னஸ் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தீவைத்தமை மற்றும் தேவாலயத்துக்குச் சேதம் விளைவித்த உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 150,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படலாம் என என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சேதமடைந்த தேவாலயத்தை மறுசீரமைப்புச் செய்ய பிரெஞ்சு அரசாங்கம் உறுதியளித்துள்ளது.